
சென்னை, நவ.11 (டிஎன்எஸ்) தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த இயக்குநர் விக்ரமன், தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
1200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு செயல்படும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு இயக்குநர் பாராதிராஜா தலைவராக இருக்கிறார். துணைத் தலைவராக இயக்குநர் விக்ரமன் பதவி வகித்து வந்தார். செயலாளராக ஆர்.கே.செல்வமணியும், பொருளாளாராக எழிலும் பதவி வகித்து வந்தார்கள்.
அண்மையில்தான் இயக்குநர்கள் சங்கம் நாற்பதாவது ஆண்டு நிறைவு விழாவை 'டி40' என்ற பெயரில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இந்த நிலையில் இயக்குநர் விக்ரமன் திடீர் என்று தனது பதவியை ராஜினாம செய்திருக்கிறார். இயக்குநர்கள் சங்கம் நடத்திய விழாவில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் இதுபோன்ற ராஜினாமாக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ராஜினாமா கடிதத்தை செயலாளர் ஆர்.கே.செல்வமணிக்கு அனுப்பி வைத்திருக்கும் விக்ரமன், தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சொந்த வேலை காரணமாகவும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். (டிஎன்எஸ்)